திருநாவுக்கரசு சுவாமிகள் தேவாரம்
ஆறாம் திருமுறை
6.3 திருவதிகை வீரட்டானம் - ஏழைத் திருத்தாண்டகம்
வெறிவிரவு கூவிளநற் றொங்க லானை
    வீரட்டத் தானைவெள் ளேற்றி னானைப்
பொறியரவி னானைப்புள் ளூர்தி யானைப்
    பொன்னிறத்தி னானைப் புகழ்தக் கானை
அறிதற் கரியசீ ரம்மான் றன்னை
    அதியரைய மங்கை அமர்ந்தான் றன்னை
எறிகெடிலத் தானை இறைவன் றன்னை
    ஏழையே னான்பண் டிகழந்த வாறே.
1
வெள்ளிக்குன் றன்ன விடையான் றன்னை
    வில்வலான் வில்வட்டங் காய்ந்தான் றன்னைப்
புள்ளி வரிநாகம் பூண்டான் றன்னைப்
    பொன்பிதிர்ந் தன்ன சடையான் றன்னை
வள்ளி வளைத்தோள் முதல்வன் றன்னை
    வாரா வுலகருள வல்லான் றன்னை
எள்க இடுபிச்சை ஏற்பான் றன்னை
    ஏழையே னான்பண் டிகழந்த வாறே.
2
முந்தி யுலகம் படைத்தான் றன்னை
    மூவர் முதலாய மூர்த்தி தன்னைச்
சந்தவெண் டிங்கள் அணிந்தான் றன்னைத்
    தவநெறிகள் சாதிக்க வல்லான் றன்னைச்
சிந்தையில் தீர்வினையைத் தேனைப் பாலைச்
    செழுங்கெடில வீரட்டம் மேவி னானை
எந்தை பெருமானை ஈசன் றன்னை
    ஏழையே னான்பண் டிகழந்த வாறே.
3
மந்திரமும் மறைப்பொருளு மானான் றன்னை
    மதியமும் ஞாயிறுங் காற்றுந் தீயும்
அந்தரமு மலைகடலு மானான் றன்னை
    அதியரைய மங்கை அமர்ந்தான் றன்னைக்
கந்தருவஞ் செய்திருவர் கழல்கை கூப்பிக்
    கடிமலர்கள் பலதூவிக் காலை மாலை
இந்திரனும் வானவருந் தொழச்செல் வானை
    ஏழையே னான்பண் டிகழந்த வாறே.
4
ஒருபிறப்பி லானடியை உணர்ந்துங் காணார்
    உயர்கதிக்கு வழிதேடிப் போக மாட்டார்
வருபிறப்பொன் றுணராது மாசு பூசி
    வழிகாணா தவர்போல்வார் மனத்த னாகி
அருபிறப்பை அறுப்பிக்கும் அதிகை யூரன்
    அம்மான்றன் அடியிணையே அணைந்து வாழா
திருபிறப்பும் வெறுவியராய் இருந்தார் சொற்கேட்
    டேழையே னான்பண் டிகழந்த வாறே.
5
ஆறேற்க வல்ல சடையான் றன்னை
    அஞ்சனம் போலு மிடற்றான் றன்னைக்
கூறேற்கக் கூறமர வல்லான் றன்னைக்
    கோல்வளைக்கை மாதராள் பாகன் றன்னை
நீறேற்கப் பூசும் அகலத் தானை
    நின்மலன் றன்னை நிமலன் றன்னை
ஏறேற்க ஏறுமா வல்லான் றன்னை
    ஏழையே னான்பண் டிகழந்த வாறே.
6
குண்டாக்க னாயுழன்று கையி லுண்டு
    குவிமுலையார் தம்முன்னே நாண மின்றி
உண்டி யுகந்தமணே நின்றார் சொற்கேட்
    டுடனாகி யுழிதந்தேன் உணர்வொன் றின்றி
வண்டுலவு கொன்றையங் கண்ணி யானை
    வானவர்க ளேத்தப் படுவான் றன்னை
எண்டிசைக்கும் மூர்த்தியாய் நின்றான் றன்னை
    ஏழையே னான்பண் டிகழந்த வாறே.
7
உறிமுடித்த குண்டிகைதங் கையிற் றூக்கி
    ஊத்தைவாய்ச் சமணர்க்கோர் குண்டாக் கனாய்க்
கறிவிரவு நெய்சோறு கையி லுண்டு
    கண்டார்க்குப் பொல்லாத காட்சி யானேன்
மறிதிரைநீர்ப் பவ்வநஞ் சுண்டான் றன்னை
    மறித்தொருகால் வல்வினையேன் நினைக்க மாட்டேன்
எறிகெடில நாடர் பெருமான் றன்னை
    ஏழையே னான்பண் டிகழந்த வாறே.
8
நிறைவார்ந்த நீர்மையாய் நின்றான் றன்னை
    நெற்றிமேற் கண்ணொன் றுடையான் றன்னை
மறையானை மாசொன் றிலாதான் றன்னை
    வானவர்மேல் மலரடியை வைத்தான் றன்னைக்
கறையானைக் காதார் குழையான் றன்னைக்
    கட்டங்க மேந்திய கையி னானை
இறையானை எந்தை பெருமான் றன்னை
    ஏழையே னான்பண் டிகழந்த வாறே.
9
தொல்லைவான் சூழ்வினைகள் சூழப் போந்து
    தூற்றியே னாற்றியேன் சுடராய் நின்று
வல்லையே இடர்தீர்த்திங் கடிமை கொண்ட
    வானவர்க்குந் தானவர்க்கும் பெருமான் றன்னைக்
கொல்லைவாய்க் குருந்தொசித்துக் குழலு மூதுங்
    கோவலனும் நான்முகனுங் கூடி யெங்கும்
எல்லைகாண் பரியானை எம்மான் றன்னை
    ஏழையே னான்பண் டிகழந்த வாறே.
10
முலைமறைக்கப் பட்டுநீ ராடப் பெண்கள்
    முறைமுறையால் நந்தெய்வ மென்று தீண்டித்
தலைபறிக்குந் தன்மையர்க ளாகி நின்று
    தவமேயென் றவஞ்செய்து தக்க தோரார்
மலைமறிக்கச் சென்ற இலங்கைக் கோனை
    மதனழியச் செற்றசே வடியி னானை
இலைமறித்த கொன்றையந் தாரான் றன்னை
    ஏழையே னான்பண் டிகழந்த வாறே.
11
திருச்சிற்றம்பலம்

திருநாவுக்கரசு சுவாமிகள் தேவாரம்
ஆறாம் திருமுறை
6.4 திருவதிகை வீரட்டானம் - அடையாளத் திருத்தாண்டகம்
சந்திரனை மாகங்கைத் திரையால் மோதச்
    சடாமகுடத் திருத்துமே சாம வேதக்
கந்தருவம் விரும்புமே கபால மேந்து
    கையனே மெய்யனே கனக மேனிப்
பந்தணவு மெல்விரலாள் பாக னாமே
    பசுவேறு மேபரம யோகி யாமே
ஐந்தலைய மாசுணங்கொண் டரையார்க் கும்மே
    அவனாகில் அதிகைவீ ரட்ட னாமே.
1
ஏறேறி யேழுலகும் உழிதர் வானே
    இமையவர்கள் தொழுதேத்த இருக்கின் றானே
பாறேறு படுதலையிற் பலிகொள் வானே
    படவரவந் தடமார்பிற் பயில்வித் தானே
நீறேறு செழும்பவளக் குன்றொப் பானே
    நெற்றிமேல் ஒற்றைக்கண் நிறைவித் தானே
ஆறேறு சடைமுடிமேற் பிறைவைத் தானே
    அவனாகில் அதிகைவீ ரட்ட னாமே.
2
முண்டத்திற் பொலிந்திலங்கு மேனி யானே
    முதலாகி நடுவாகி முடிவா னானே
கண்டத்தில் வெண்மருப்பின் காறை யானே
    கதநாகங் கொண்டாடுங் காட்சி யானே
பிண்டத்தின் இயற்கைக்கோர் பெற்றா யானே
    பெருநிலநீர் தீவளிஆ காச மாகி
அண்டத்துக் கப்பாலாய் இப்பா லானே
    அவனாகில் அதிகைவீ ரட்ட னாமே.
3
செய்யனே கரியனே கண்டம் பைங்கண்
    வெள்ளெயிற்றா டரவனே வினைகள் போக
வெய்யனே தண்கொன்றை மிலைத்த சென்னிச்
    சடையனே விளங்குமழுச் சூல மேந்துங்
கையனே காலங்கள் மூன்றா னானே
    கருப்புவிற் றனிக்கொடும்பூண் காமற் காய்ந்த
ஐயனே பருத்துயர்ந்த ஆனேற் றானே
    அவனாகில் அதிகைவீ ரட்ட னாமே.
4
பாடுமே யொழியாமே நால்வே தமும்
    படர்சடைமேல் ஒளிதிகழப் பனிவெண் டிங்கள்
சூடுமே அரைதிகழத் தோலும் பாம்புஞ்
    சுற்றுமே தொண்டைவாய் உமையோர் பாகங்
கூடுமே குடமுழவம் வீணை தாளங்
    குறுநடைய சிறுபூதம் முழக்க மாக்கூத்
தாடுமே அந்தடக்கை அனலேந் தும்மே
    அவனாகில் அதிகைவீ ரட்ட னாமே.
5
ஒழித்திடுமே உள்குவார் உள்ளத் துள்ள
    உறுபிணியுஞ் செறுபகையும் ஒற்றகைக் கண்ணால்
விழித்திடுமே காமனையும் பொடியா வீழ
    வெள்ளப் புனற்கங்கை செஞ்சடைமேல்
இழித்திடுமே ஏழுலகுந் தானா கும்மே
    இயங்குந் திரிபுரங்க ளோரம் பினால்
அழித்திடுமே ஆதிமா தவத்து ளானே
    அவனாகில் அதிகைவீ ரட்ட னாமே.
6
குழலோடு கொக்கரைகைத் தாளம் மொந்தை
    குறட்பூதம் முன்பாடத் தானா டும்மே
கழலாடு திருவிரலாற் கரணஞ் செய்து
    கனவின்கண் திருவுருவந் தான்காட் டும்மே
எழிலாருந் தோள்வீசி நடமா டும்மே
    ஈமப் புறங்காட்டில் ஏமந் தோறும்
அழலாடு மேயட்ட மூர்த்தி யாமே
    அவனாகில் அதிகைவீ ரட்ட னாமே.
7
மாலாகி மதமிக்க களிறு தன்னை
    வதைசெய்து மற்றதனின் உரிவை கொண்டு
மேலாலுங் கீழாலுந் தோன்றா வண்ணம்
    வெம்புலால் கைகலக்க மெய்போர்த் தானே
கோலாலம் படவரைநட் டரவு சுற்றிக்
    குரைகடலைத் திரையலறக் கடைந்து கொண்ட
ஆலால முண்டிருண்ட கண்டத் தானே
    அவனாகில் அதிகைவீ ரட்ட னாமே.
8
செம்பொனாற் செய்தழகு பெய்தாற் போலுஞ்
    செஞ்சடையெம் பெருமானே தெய்வ நாறும்
வம்புலா மலர்க்கூந்த லுமையாள் காதல்
    மணவாள னேவலங்கை மழுவா ளனே
நம்பனே நான்மறைகள் தொழநின் றானே
    நடுங்காதார் புரமூன்றும் நடுங்கச் செற்ற
அம்பனே அண்டகோ சரத்து ளானே
    அவனாகில் அதிகைவீ ரட்ட னாமே.
9
எழுந்ததிரை நதித்துவலை நனைந்த திங்கள்
    இளநிலாத் திகழ்கின்ற வளர்ச டையனே
கொழும்பவளச் செங்கனிவாய்க் காமக் கோட்டி
    கொங்கையிணை அமர்பொருது கோலங் கொண்ட
தழும்புளவே வரைமார்பில் வெண்ணூ லுண்டே
    சாந்தமொடு சந்தனத்தின் அளறு தங்கி
அழுந்தியசெந் திருவுருவில் வெண்ணீற் றானே
    அவனாகில் அதிகைவீ ரட்ட னாமே.
10
நெடியானும் நான்முகனும் நேடிக் காணா
    நீண்டானே நேரொருவ ரில்லா தானே
கொடியேறு கோலமா மணிகண் டனே
    கொல்வேங்கை அதளனே கோவ ணவனே
பொடியேறு மேனியனே ஐயம் வேண்டிப்
    புவலோகந் திரியுமே புரிநூ லானே
அடியாரை அமருலகம் ஆள்விக் கும்மே
    அவனாகில் அதிகைவீ ரட்ட னாமே.
11
திருச்சிற்றம்பலம்

திருநாவுக்கரசு சுவாமிகள் தேவாரம்
ஆறாம் திருமுறை
6.5 திருவதிகை வீரட்டானம் - போற்றித் திருத்தாண்டகம்
எல்லாஞ் சிவனென்ன நின்றாய் போற்றி
    எரிசுடராய் நின்ற இறைவா போற்றி
கொல்லார் மழுவாட் படையாய் போற்றி
    கொல்லுங் கூற்றொன்றை உதைத்தாய் போற்றி
கல்லாதார் காட்சிக் கரியாய் போற்றி
    கற்றா ரிடும்பை களைவாய் போற்றி
வில்லால் வியனரணம் எய்தாய் போற்றி
    வீரட்டங் காதல் விமலா போற்றி.
1
பாட்டுக்கும் ஆட்டுக்கும் பண்பா போற்றி
    பல்லூழி யாய படைத்தாய் போற்றி
ஒட்டகத்தே யூணா உகந்தாய் போற்றி
    உள்குவார் உள்ளத் துறைவாய் போற்றி
காட்டகத்தே ஆடல் மகிழ்ந்தாய் போற்றி
    கார்மேக மன்ன மிடற்றாய் போற்றி
ஆட்டுவதோர் நாகம் அசைத்தாய் போற்றி
    அலைகெடில வீரட்டத் தாள்வாய் போற்றி.
2
முல்லையங் கண்ணி முடியாய் போற்றி
    முழுநீறு பூசிய மூர்த்தி போற்றி
எல்லை நிறைந்த குணத்தாய் போற்றி
    ஏழ்நரம்பி னோசை படைத்தாய் போற்றி
சில்லைச் சிரைத்தலையில் ஊணா போற்றி
    சென்றடைந்தார் தீவினைகள் தீர்ப்பாய் போற்றி
தில்லைச்சிற் றம்பலம் மேயாய் போற்றி
    திருவீரட் டானத்தெஞ் செல்வா போற்றி.
3
சாம்பர் அகலத் தணிந்தாய் போற்றி
    தவநெறிகள் சாதித்து நின்றாய் போற்றி
கூம்பித் தொழுவார்தங் குற்றே வலைக்
    குறிக்கொண் டிருக்குங் குழகா போற்றி
பாம்பும் மதியும் புனலுந் தம்மிற்
    பகைதீர்த் துடன்வைத்த பண்பா போற்றி
ஆம்பல் மலர்கொண் டணிந்தாய் போற்றி
    அலைகெடில வீரட்டத் தாள்வாய் போற்றி.
4
நீறேறு நீல மிடற்றாய் போற்றி
    நிழல்திகழும் வெண்மழுவாள் வைத்தாய் போற்றி
கூறே றுமையொருபாற் கொண்டாய் போற்றி
    கோளரவம் ஆட்டுங் குழகா போற்றி
ஆறேறு சென்னி யுடையாய் போற்றி
    அடியார்கட் காரமுத மானாய் போற்றி
ஏறோ என்றும் உகப்பாய் போற்றி
    இருங்கெடில வீரட்டத் தெந்தாய் போற்றி.
5
பாடுவார் பாட லுகப்பாய் போற்றி
    பழையாற்றுப் பட்டீச் சுரத்தாய் போற்றி
வீடுவார் வீடருள வல்லாய் போற்றி
    வேழத் துரிவெருவப் போர்த்தாய் போற்றி
நாடுவார் நாடற் கரியாய் போற்றி
    நாகம் அரைக்கசைத்த நம்பா போற்றி
ஆடுமா னைந்தும் உகப்பாய் போற்றி
    அலைகெடில வீரட்டத் தாள்வாய் போற்றி.
6
மண்துளங்க ஆடல் மகிழ்ந்தாய் போற்றி
    மால்கடலு மால்விசும்பு மானாய் போற்றி
விண்துளங்க மும்மதிலும் எய்தாய் போற்றி
    வேழத் துரிமூடும் விகிர்தா போற்றி
பண்துளங்கப் பாடல் பயின்றாய் போற்றி
    பார்முழுது மாய பரமா போற்றி
கண்துளங்கக் காமனைமுன் காய்ந்தாய் போற்றி
    கார்க்கெடிலங் கொண்ட கபாலி போற்றி.
7
வெஞ்சினவெள் ளேறூர்தி யுடையாய் போற்றி
    விரிசடைமேல் வெள்ளம் படைத்தாய் போற்றி
துஞ்சாப் பலிதேருந் தோன்றால் போற்றி
    தொழுதகை துன்பந் துடைப்பாய் போற்றி
நஞ்சொடுங்குங் கண்டத்து நாதா போற்றி
    நான்மறையோ டாறங்க மானாய் போற்றி
அஞ்சொலாள் பாகம் அமர்ந்தாய் போற்றி
    அலைகெடில வீரட்டத் தாள்வாய் போற்றி.
8
சிந்தையாய் நின்ற சிவனே போற்றி
    சீபர்ப்ப தஞ்சிந்தை செய்தாய் போற்றி
புந்தியாய்ப் புண்டரிகத் துள்ளாய் போற்றி
    புண்ணியனே போற்றி புனிதா போற்றி
சந்திடியாய் நின்ற சதுரா போற்றி
    தத்துவனே போற்றியென் தாதாய் போற்றி
அந்தியாய் நின்ற அரனே போற்றி
    அலைகெடில வீரட்டத் தாள்வாய் போற்றி.
9
முக்கணா போற்றி முதல்வா போற்றி
    முருகவேள் தன்னைப் பயந்தாய் போற்றி
தக்கணா போற்றி தருமா போற்றி
    தத்துவனே போற்றியென் தாதாய் போற்றி
தொக்கணா வென்றிருவர் தோள்கை கூப்பத்
    துளங்கா தெரிசுடராய் நின்றாய் போற்றி
எக்கண்ணுங் கண்ணிலேன் எந்தாய் போற்றி
    எறிகெடில வீரட்டத் தீசா போற்றி.
10
திருச்சிற்றம்பலம்

திருநாவுக்கரசு சுவாமிகள் தேவாரம்
ஆறாம் திருமுறை
6.6 திருவதிகை வீரட்டானம் - திருவடித் திருத்தாண்டகம்
அரவணையான் சிந்திக் தரற்றும்படி
    அருமறையான் சென்னிக் கணியாமடி
சரவணத்தான் கைதொழுது சாரும்மடி
    சார்ந்தார்கட் கெல்லாஞ் சரணாமடி
பரவுவார் பாவம் பறைக்கும்படி
    பதினெண் கணங்களும் பாடும்மடி
திரைவிரவு தென்கெடில நாடன்னடி
    திருவீரட் டானத்தெஞ் செல்வன்னடி.
1
கொடுவினையா ரென்றுங் குறுகாவடி
    குறைந்தடைந்தார் ஆழாமைக் காக்கும்மடி
படுமுழவம் பாணி பயிற்றும்மடி
    பதைத்தெழுந்த வெங்கூற்றைப் பாய்ந்தவடி
கடுமுரணே றூர்ந்தான் கழற்சேவடி
    கடல்வையங் காப்பான் கருதும்மடி
நெடுமதியங் கண்ணி யணிந்தானடி
    நிறைகெடில வீரட்டம் நீங்காவடி.
2
வைதெழுவார் காமம்பொய் போகாவடி
    வஞ்சவலைப் பாடொன் றில்லாவடி
கைதொழுது நாமேத்திக் காணும்மடி
    கணக்கு வழக்கைக் கடந்தவடி
நெய்தொழுது நாமேத்தி யாட்டும்மடி
    நீள்விசும்பை ஊடறுத்து நின்றவடி
தெய்வப் புனற்கெடில நாடன்னடி
    திருவீரட் டானத்தெஞ் செல்வன்னடி.
3
அரும்பித்த செஞ்ஞாயி றேய்க்கும்மடி
    அழகெழுத லாகா அருட்சேவடி
சுரும்பித்த வண்டினங்கள் சூழ்ந்தவடி
    சோமனையுங் காலனையுங் காய்ந்தவடி
பெரும்பித்தர் கூடிப் பிதற்றும்மடி
    பிழைத்தார் பிழைப்பறிய வல்லவடி
திருந்துநீர் தென்கெடில நாடன்னடி
    திருவீரட் டானத்தெஞ் செல்வன்னடி.
4
ஒருகாலத் தொன்றாகி நின்றவடி
    ஊழிதோ றூழி உயர்ந்தவடி
பொருகழலும் பல்சிலம்பும் ஆர்க்கும்மடி
    புகழ்வார் புகழ்தகைய வல்லவடி
இருநிலத்தார் இன்புற்றங் கேத்தும்மடி
    இன்புற்றார் இட்டபூ ஏறும்மடி
திருவதிகைத் தென்கெடில நாடன்னடி
    திருவீரட் டானத்தெஞ் செல்வன்னடி.
5
திருமகட்குச் செந்தா மரையாமடி
    சிறந்தவர்க்குத் தேனாய் விளைக்கும்மடி
பொருளவர்க்குப் பொன்னுரையாய் நின்றவடி
    புகழ்வார் புகழ்தகைய வல்லவடி
உருவிரண்டு மொன்றொடொன் றொவ்வாவடி
    உருவென் றுணரப் படாதவடி
திருவதிகைத் தென்கெடில நாடன்னடி
    திருவீரட் டானத்தெஞ் செல்வன்னடி.
6
உரைமாலை யெல்லா முடையவடி
    உரையால் உணரப் படாதவடி
வரைமாதை வாடாமை வைக்கும்மடி
    வானவர்கள் தாம்வணங்கி வாழ்த்தும்மடி
அரைமாத் திரையில் லடங்கும்மடி
    அகலம் அளக்கிற்பார் இல்லாவடி
கரைமாங் கலிக்கெடில நாடன்னடி
    கமழ்வீரட் டானக் காபாலியடி.
7
நறுமலராய் நாறும் மலர்ச்சேவடி
    நடுவாய் உலகநா டாயவடி
செறிகதிருந் திங்களுமாய் நின்றவடி
    தீத்திரளா யுள்ளே திகழ்ந்தவடி
மறுமதியை மாசு கழுவும்மடி
    மந்திரமுந் தந்திரமு மாயவடி
செறிகெடில நாடர் பெருமானடி
    திருவீரட் டானத்தெஞ் செல்வன்னடி.
8
அணியனவுஞ் சேயனவு மல்லாவடி
    அடியார்கட் காரமுத மாயவடி
பணிபவர்க்குப் பாங்காக வல்லவடி
    பற்றற்றார் பற்றும் பவளவடி
மணியடி பொன்னடி மாண்பாமடி
    மருந்தாய்ப் பிணிதீர்க்க வல்லவடி
தணிபாடு தண்கெடில நாடன்னடி
    தகைசார் வீரட்டத் தலைவன்னடி.
9
அந்தாம ரைப்போ தலர்ந்தவடி
    அரக்கனையும் ஆற்றல் அழித்தவடி
முந்தாகி முன்னே முளைத்தவடி
    முழங்கழலாய் நீண்டவெம் மூர்த்தியடி
பந்தாடு மெல்விரலாள் பாகன்னடி
    பவளத் தடவரையே போல்வானடி
வெந்தார் சுடலைநீ றாடும்மடி
    வீரட்டங் காதல் விமலன்னடி.
10
திருச்சிற்றம்பலம்

திருநாவுக்கரசு சுவாமிகள் தேவாரம்
ஆறாம் திருமுறை
6.7 திருவதிகை வீரட்டானம் - காப்புத் திருத்தாண்டகம்
செல்வப் புனற்கெடில வீரட்டமுஞ்
    சிற்றேம மும்பெருந்தண் குற்றாலமுந்
தில்லைச்சிற் றம்பலமுந் தென்கூடலுந்
    தென்னானைக் காவுஞ் சிராப்பள்ளியும்
நல்லூருந் தேவன் குடிமருகலும்
    நல்லவர்கள் தொழுதேத்தும் நாரையூருங்
கல்லலகு நெடும்புருவக் கபாலமேந்திக்
    கட்டங்கத் தோடுறைவார் காப்புக்களே.
1
தீர்த்தப் புனற்கெடில வீருட்டமுந்
    திருக்கோவல் வீரட்டம் வெண்ணெய்நல்லூர்
ஆர்த்தருவி வீழ்சுனைநீர் அண்ணாமலை
    அறையணி நல்லூரும் அரநெறியும்
ஏத்துமின்கள் நீரேத்த நின்றஈசன்
    இடைமரு தின்னம்பர் ஏகம்பமும்
கார்த்தயங்கு சோலைக் கயிலாயமுங்
    கண்ணுதலான் தன்னுடைய காப்புக்களே.
2
சிறையார் புனற்கெடில வீரட்டமுந்
    திருப்பா திரிப்புலியூர் திருவாமாத்தூர்
துறையார் வனமுனிக ளேத்தநின்ற
    சோற்றுத் துறைதுருத்தி நெய்த்தானமும்
அறையார் புனலொழுகு காவிரிசூழ்
    ஐயாற் றமுதன் பழனம்நல்ல
கறையார் பொழில்புடைசூழ் கானப்பேருங்
    கழுக்குன்றுந் தம்முடைய காப்புக்களே.
3
திரையார் புனற்கெடில வீரட்டமுந்
    திருவாரூர் தேவூர் திருநெல்லிக்கா
உரையார் தொழநின்ற ஒற்றியூரும்
    ஓத்தூரும் மாற்பேறும் மாந்துறையும்
வரையா ரருவிசூழ் மாநதியும்
    மாகாளங் கேதாரம் மாமேருவுங்
கரையார் புனலொழுகு காவிரிசூழ்
    கடம்பந் துறையுறைவார் காப்புக்களே.
4
செழுநீர்ப் புனற்கெடில வீரட்டமுந்
    திரிபுராந் தகந்தென்னார் தேவீச்சரங்
கொழுநீர் புடைசுழிக்குங் கோட்டுக்காவுங்
    குடமூக்குங் கோகரணங் கோலக்காவும்
பழிநீர்மை யில்லாப் பனங்காட்டூரும்
    பனையூர் பயற்றூர் பராய்த்துறையுங்
கழுநீர் மதுவிரியுங் காளிங்கமுங்
    கணபதீச் சரத்தார்தங் காப்புக்களே.
5
தெய்வப் புனற்கெடில வீரட்டமுஞ்
    செழுந்தண் பிடவூருஞ் சென்றுநின்று
பவ்வந் திரியும் பருப்பதமும்
    பறியலூர் வீரட்டம் பாவநாசம்
மவ்வந் திரையும் மணிமுத்தமும்
    மறைக்காடும் வாய்மூர் வலஞ்சுழியுங்
கவ்வை வரிவண்டு பண்ணேபாடுங்
    கழிப்பாலை தம்முடைய காப்புக்களே.
6
தெண்ணீர்ப் புனற்கெடில வீரட்டமுஞ்
    சிக்காலி வல்லந் திருவேட்டியும்
உண்ணீரார் ஏடகமும் ஊறல்அம்பர்
    உறையூர் நறையூர் அரணநல்லூர்
விண்ணார் விடையான் விளமர்வெண்ணி
    மீயச்சூர் வீழி மிழலைமிக்க
கண்ணார் நுதலார் கரபுரமுங்
    காபாலி யாரவர்தங் காப்புக்களே.
7
தெள்ளும் புனற்கெடில வீரட்டமுந்
    திண்டீச் சரமுந் தீருப்புகலூர்
எள்ளும் படையான் இடைத்தானமும்
    ஏயீச் சரமுநல் லேமங்கூடல்
கொள்ளு மிலயத்தார் கோடிகாவுங்
    குரங்கணில் முட்டமுங் குறும்பலாவுங்
கள்ளருந்தத் தெள்ளியா ருள்கியேத்துங்
    காரோணந் தம்முடைய காப்புக்களே.
8
சீரார் புனற்கெடில வீரட்டமுந்
    திருக்காட்டுப் பள்ளி திருவெண்காடும்
பாரார் பரவுஞ்சீர்ப் பைஞ்ஞீலியும்
    பந்தணை நல்லூரும் பாசூர்நல்லம்
நீரார் நிறைவயல்சூழ் நின்றியூரும்
    நெடுங்களமும் நெல்வெண்ணெய் நெல்வாயிலுங்
காரார் கமழ்கொன்றைத் தாரார்கென்றுங்
    கடவூரில் வீரட்டங் காப்புக்களே.
9
சிந்தும் புனற்கெடில வீரட்டமுந்
    திருவாஞ் சியமுந் திருநள்ளாறும்
அந்தண் பொழில்புடைசூழ் அயோகந்தியும்
    ஆக்கூரு மாவூரு மான்பட்டியும்
எந்தம் பெருமாற் கிடமாவது
    இடைச்சுரமும் எந்தை தலைச்சங்காடுங்
கந்தங் கமழுங் கரவீரமுங்
    கடம்பூர்க் கரக்கோயில் காப்புக்களே.
10
தேனார் புனற்கெடில வீரட்டமுந்
    திருச்செம்பொன் பள்ளிதிருப் பூவணமும்
வானோர் வணங்கும் மணஞ்சேரியும்
    மதிலுஞ்சை மாகாளம் வாரணாசி
ஏனோர்க ளேத்தும் வெகுளீச்சரம்
    இலங்கார் பருப்பதத்தோ டேணார்சோலைக்
கானார் மயிலார் கருமாரியுங்
    கறைமிடற்றார் தம்முடைய காப்புக்களே.
11
திருநீர்ப் புனற்கெடில வீரட்டமுந்
    திருவளப்பூர் தெற்கேறு சித்தவடம்
வருநீர் வளம்பெருகு மானிருபமும்
    மயிலாப்பில் மன்னினார் மன்னியேத்தும்
பெருநீர் வளர்சடையான் பேணிநின்ற
    பிரமபுரஞ் சுழியல் பெண்ணாகடங்
கருநீல வண்டற்றுங் காளத்தியுங்
    கயிலாயந் தம்முடைய காப்புக்களே.
12
திருச்சிற்றம்பலம்

மேலே செல்க

முன்பக்கம்

   
 
© 2006 www.templeyatra.com - All Rights Reserved.
Designed by www.templeyatra.com